ILANTHAMIZH Binder12
Thursday, September 23, 2010
Thursday, September 9, 2010
Sunday, August 29, 2010
கணணி, கணினி எது சரியான சொற்பிரயோகம்?
கணனி என்பது தவறான சொற்பிரயோகம் ஆகும். கணினி என்பதே சரியான தமிழ்ச் சொல் ஆகும். சீர் இளமைச் செம்மொழி எங்கள் தாய்மொழி
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தமிழ் மொழியிலும் பல புதிய சொற்கள் உருவாகிவருகின்றன. அறிவியிலைப் படைக்க கலைச்சொல்லாக் கம் மிகவும் முக்கியம். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவருகின்றது. இதைத் தெளிவாக நாம் தெரிந்து வைத்துக்கொள்ளுதல் அவசியம். எமது கௌரவ ஆசிரியர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் தம்பி கணணி என்பது தவறான சொற்பிர யோகம், கணினி என்பதுதான் சரியான சொற்பிரயோகம் என்று கூறினார். அவசரத்தில் நாம்விடும் தவறுகள். மன்னிக்க முடியாது. திருத்தப் படவேண்டியவை. எனவே வருங்காலங்களில் இத்தகைய தவறுகள் வருவதும், கவனயீன எழுத்துப்பிழைகளும் வராது கவனம் எடுக்க உறுதிபூண்டுள்ளோம்.
அத்தோடு மட்டுமல்லாது. கணினி தொடர்பான கலைச்சொற்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் உள்ளவற்றை தொகுத்து வெளியிடவும் இருக்கின்றோம்.
.
கணினி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கணினி என்பது எண் முதலான தரவுகளைக் உட்கொண்டு, முறைப்படி கோர்த்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும். கணினிக்கு உள்ளிடும் தரவுகள் எவ்வடிவில் இருந்தாலும் (ஒலி, ஒளி, அழுத்தம் முதலியன) அவை கணினியின் இயக்கத்துக்கு அடிப்படையான 0, 1 ஆகிய எண் கோர்வைகளாக மாற்றப்பட்டே உட்கொள்ளப் படுகின்றன.
கணினிகள் அதியுச்ச பல்பயன் கொண்டவை. ஆதலால் அவற்றை அகில தகவல் செயற்படுத்தும் எந்திரங்கள் எனக் குறிப்பிடலாம். சேர்ச்-தெரிங் கூற்றின் படி ஒரு குறிப்பிட்ட இழிவுநிலை ஆற்றலை (வேறு வகையில் கூறினால் அகில தெரிங் எந்திரத்தை போன்மிக்ககூடிய எந்த கணினியும்) கொண்ட கணினி, கோட்பாட்டின் அடிப்படையில் வேறு எந்த கணினியினதும் கொள்பணியை ஆற்றக் கூடியது, அதாவதுதனியாள் உதவியாளத்தில் இருந்து மீக்கணினி வரையுள்ள எந்த கணினியினதும். ஆகவே சம்பளப்பட்டியல் தயாரிப்பதிலிருந்து தொழிலக-யந்திரனை கட்டுப்படுத்தல் வரையான அனேக கொள்பணிகளுக்கு ஒரேவிதமான கணினி வடிவமைப்புகளே பயன்படுத்தப் படுகின்றன. முந்தைய வடிவமைப்புகளை விட தற்போதைய கணினிகள் வேகத்திலும் தகவல் செயற்படுத்தல் கொள்ளளவிலும் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளன. இவற்றின் இந்த திறன் காலப்போக்கில் அடுக்குறிபோக்கில் அதிகரித்து சென்றுள்ளது. இந்த செயற்பாட்டை மூர் விதி என்று குறிப்பிடுவர்.
பல்வேறான பௌதீக பொதிகளில் கணினிகள் கிடைக்கின்றன. தொன்மையான கணினிகள் பெரிய அரங்கின் கொள்ளளவை கொண்டவையாக இருந்தன. தற்போதும் விசேட அறிவியல் கணிப்புகளுக்கு பயன்படும் மீக்கணினிகள் மற்றும் நிறுவனங்களின் பரிமாற்ற செயற்பாடு களுக்கு பயன்படும் பிரதான-சட்டங்கள் போன்றவற்றுக்கு இவ்வாறான மாபெரும் கணிப்பிடும் வசதிகள் உள்ளன. மக்களுக்கு அதிகம் பரிச்சையமானவையாக அமைவன சிறியளவானதும் ஒருத்தரின் பயன்பாட்டுக்குரியதுமானதனியாள் கணினிகளும், அதன் கொண்டுசெல் நிகரான ஏட்டுக்கணினிகளும் ஆகும். ஆனால் தற்காலத்தில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ள கணினிகளாக அமைபவை உட்பொதிக்கணினிகளாகும். உட்பொதிக்கணினிகள் இன்னொரு சாதனத்தை கட்டுப்படுத்துவதற்குரிய சிறிய கணினிகள் ஆகும். இவை சண்டை விமானங்களில் இருந்துஇலக்கமுறை படப்பிடிப்பு கருவிகள் வரை பயன்படுத்தப் படுகின்றன.
Friday, August 27, 2010
Friday, August 13, 2010
Monday, August 2, 2010
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம் எழுதிய கடிதம்
யூலை 31, 2010
ரொறன்ரோ, கனடா
சிங்கள - பவுத்த - இராணுவ மயப்படுத்தப்படும் தமிழர் தாயகம் (வட - கிழக்கு மாகாணங்கள்)
மாண்புமிகு முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தங்களை அண்மையில் கண்டு பேசியது தொடர்பாக இந்த மடலை வரைகிறோம். பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும் என்ற பழமொழிக்கு ஒப்ப போர் முடிவுக்கு வந்து ஓராண்டு கழிந்த பின்னரும் 400,000 தமிழ்மக்கள் முகாம்களிலும் குடிசைகளிலும் சொல்லொணா அல்லல்களயும் அவலங்களையும் அனுபவித்து வருகிறார்கள். குடிக்கக் கஞ்சி இல்லை, உடுக்க மாற்றுடை இல்லை, தாகத்துக்குத் தண்ணீர் இல்லை, மருந்தில்லை, பிள்ளைகள் கல்வி கற்பதற்குப் பள்ளிக்கூடங்கள் இல்லை எனச் சொல்லொணாத் துன்பத்தில் இந்த மக்கள் வாடி, வதங்கி கண்ணீரில் மிதக்கிறார்கள்.
சிங்களப் படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள 10,000 முன்னாள் போராளிகளைத் தேடி "எனது மகன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா?" எனத் தாய் தந்தையர் கண்ணீருடன் கேட்கிறார்கள். அரசு பதில் சொல்ல மறுக்கிறது. தமிழ்மக்களது மீள்வாழ்வு மீள்குடியிருப்புக்கு நிதி இல்லை என உலக நாடுகளிடம் பிச்சை கேட்கும் இராசபக்சே அரசு, அரச சார்பற்ற பன்நாட்டுத் தொண்டு நிறுவனங்கள் வடக்கிலும் கிழக்கிலும் செயல்படத் தடை போட்டுள்ளது.
போர் முடிந்த பின்னரும் பாதுகாப்புக்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூபா 20,100 கோடியை ஒதுக்கியுள்ளது. மறுபுறம் மீள்வாழ்வு மீள்குடியேற்றத்துக்கு வெறுமனே ரூபா 200 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதாவது பாதுகாப்போடு ஒப்பிடும் பொழுது மீள்வாழ்வு மீள்குடியிருப்புக்கு ஒதுக்கிய தொகை 1 விழுக்காட்டுக்கும் குறைவாகும்! இதன் மூலம் இராசபக்சே அரசு தமிழ்மக்களது மீள்வாழ்வு மீள்குடியிருப்பில் காட்டும் அக்கறையை மாண்புமிகு முதல்வர் புரிந்து கொள்ளலாம்.
தமிழர்கள் வாழும் வட - கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நாற்பதுகளில் இருந்து நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே. இதனால் 1946 இல் கிழக்கு மாகாணத்தில் 8.40 விழுக்காடாக இருந்த சிங்களவர் எண்ணிக்கை 1981 இல் 33.41 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. சிங்களவர்களுக்கு மேலதிகமாக இரண்டு தொகுதிகள் (திருகோணமலை மாவட்டத்தில் சேருவில, அம்பாரை மாவட்டத்தில் திகாமடுல்ல) உருவாக்க ப்பட்டுள்ளன. இப்போது சிங்கள அரசு வடக்கையும் சிங்கள - பவுத்த மயப்படுத்த அசுர வேகத்தில் செயல்படுகிறது. தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமான யாழ்ப்பாணத்தில் சிங்களமொழி தெரியாவிட்டால் நடமாட முடியாத பரிதாப நிலை எழுந்துள்ளது. குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சேலை உடுத்து வீதியில் செல்லத் தமிழ்ப் பெண்கள் அஞ்சுகிறார்கள்.
தமிழ்மக்களது உயிருக்கும் உடைமைக்கும் உரிய அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. அவர்களது சமூக வாழ்வியல் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. அவர்களது அடிப்படை மனிதவுரிமைகள், நடமாடும் சுதந்திரங்கள், பேச்சுச் சுதந்திரங்கள், கருத்துச் சுதந்திரங்கள் மறுக்கப்படுகின்றன. அவர்களது காணிகளும் சொத்துக்களும் கட்டாயமாக கையகப்படுத் தப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கையில் அறிவித்தல் செய்யாத இனவொதுக்கல் (Apartheid) வெறிபிடித்த சிங்கள - பவுத்த அரசினால் கடைப்பிடிக் கப்பட்டு வருகிறது.
மாண்புமிகு முதல்வர் அவர்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் "தமிழர்களின் விவசாய நிலங்களைப் பிடுங்கி சிங்களவர்களிடம் கொடுக்கும் அவலம் நடைபெறுகிறது, இப்போது முழுமையான தமிழர் பூமியாக உள்ள இலங்கையின் வடக்குப் பகுதியை இன்னும் பத்தாண்டுகளுக்குள் சிங்கள மக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசாலும் இந்திய அரசாலும் மட்டுமே முடியும் இந்த இரண்டு அரசுகளை மட்டுமே நம்பியுள்ளோம்" என உங்களிடம் தெரிவித்துள்ளார்கள்.
திருகோணமலை மாவட்டம் 2,727 ச. கிமீ பரப்பளவைக் கொண்டது. 1827ஆம் ஆண்டில் இந்த மாவட்டத்தில் 250 சிங்களவர்கள் (1.3 விழுக்காடு) மட்டுமே வாழ்ந்தார்கள். அப்போது தமிழர்கள் 15, 663 பேராகவும் முஸ்லிம்கள் 3 ,245 பேராகவும் காணப்பட்டனர். அதாவது இந்த மாவட்டத்தின் மொத்த குடித் தொகையில் தமிழர்கள் 81.76 விழுக்காடாகவும் முஸ்லிம்கள் 16.94 விழுக்காடாகவும் சிங்கள வர்கள் 1.30 விழுக்காடாகவும் காணப்பட்டனர். 1981 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட குடித்தொகை முடிவுகள் சிங்களக் குடியேற்றம் மற்றும் முஸ்லிம்களின் குடித் தொகை அதிகரிப்பு என்பனவற்றைத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் 1827 இல் 1.3 விழுக்காடாக மட்டும் இருந்த சிங்களவர்கள் 1981 இல் 33.41 விழுக்காடாகவும், 1827 இல் 16.94 விழுக்காடாக இருந்த முஸ்லிம்கள் 1981 இல் 29.32 விழுக்காடாக அதிகரித்துள்ளார்கள். அதே சமயம் 1827 இல் 81.76 விழுக்காடாக இருந்த தமிழர்கள் 1981 இல் 36.39 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இன்று போரினாலும் புலப்பெயர்வாலும் தமிழர்களது விழுக்காடு மேலும் குறைந்திருப்பதை 2006, 2007 குடித்தொகை மதிப்பீடு எடுத்துக் காட்டுகிறது.
கீழ்க்கண்ட அட்டவணை 1, 1827 - 2007 ஆண்டு காலப்பகுதியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் திருகோணமலை மாவட்டக் குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகின்றது.
அட்டவணை 1
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் திருகோணமலை மாவட்ட குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றம் 1827-2007
ஆண்டு | சிங்களவர் | தமிழர் | முஸ்லிம் | ஏனையோர் | மொத்தம் | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
எண் | % | எண் | % | எண் | % | எண் | % | எண் | % | |
1827 | 250 | 1.30 | 15,663 | 81.76 | 3,245 | 16.94 | 0 | 0.00 | 19,158 | 100 |
1881 | 935 | 4.21 | 14,304 | 64.44 | 5,746 | 25.89 | 1,212 | 5.46 | 22,197 | 100 |
1891 | 1,105 | 4.29 | 17,117 | 66.49 | 6,426 | 24.96 | 1,097 | 4.26 | 25,745 | 100 |
1901 | 1,203 | 4.23 | 17,060 | 59.98 | 8,258 | 29.04 | 1,920 | 6.75 | 28,441 | 100 |
1911 | 1,138 | 3.82 | 17,233 | 57.92 | 9,700 | 32.60 | 1,684 | 5.66 | 29,755 | 100 |
1921 | 1,501 | 4.40 | 18,580 | 54.47 | 12,846 | 37.66 | 1,185 | 3.47 | 34,112 | 100 |
1946 | 11,606 | 15.29 | 33,795 | 44.51 | 23,219 | 30.58 | 7,306 | 9.62 | 75,926 | 100 |
1953 | 15,296 | 18.23 | 37,517 | 44.71 | 28,616 | 34.10 | 2,488 | 2.96 | 83,917 | 100 |
1963 | 39,925 | 28.82 | 54,452 | 39.30 | 40,775 | 29.43 | 3,401 | 2.45 | 138,553 | 100 |
1971 | 54,744 | 29.08 | 71,749 | 38.11 | 59,924 | 31.83 | 1,828 | 0.97 | 188,245 | 100 |
1981 | 85,503 | 33.41 | 93,132 | 36.39 | 75,039 | 29.32 | 2,274 | 0.89 | 255,948 | 100 |
2001* | ||||||||||
2006 மதிப்பீடு | 100,454 | 24.85 | 143,282 | 34.73 | 168,696 | 40.89 | 115 | 0.03 | 412,547 | 100 |
2007 மதிப்பீடு | 84,766 | 25.35 | 96,142 | 28.75 | 152,019 | 45.47 | 1,436 | 0.43 | 334,363 | 100 |
மூலம்: சிறிலங்கா புள்ளி விபரத் திணைக்களம் * 2001 ஆம் ஆண்டு வட - கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் அம்பாரை தவிர்ந்த எனைய 7 மாவட்டங்களில் போர்ச் சூழல் காரணமாக குடித் தொகைக் கணிப்பீடு நடத்தப்படவில்லை.சிங்களக் குடியேற்றத்தின் பெருக்கால் 1961 ஆம் ஆண்டு அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டதாகும். அதன் நிலப்பரப்பு 4,431 ச.கிமீ ஆகும். 1963 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் 46.11 விழுக்காடாகவும் சிங்களவர் 29.28 விழுக்காடாகவும் தமிழர் 23.85 விழுக்காடாகவும் காணப்பட்டனர். ஆனால் 2007 ஆம் ஆண்டு சிங்களவர்கள் 37.49 விழுக்காடாக உயர்வடைந்திருக்கின்றனர். அதேவேளை, தமிழர் 18.3 விழுக்காடாகவும் முஸ்லிம்கள் 44 விழுக்காடாகவும் வீழ்ச்சியடைந்துள்ளனர். கீழ்க்கண்ட அட்டவணை 2, 1963 - 2007 ஆண்டு காலப்பகுதியில் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தினால் அம்பாரை மாவட்ட குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகின்றது. |
அட்டவணை 2
அம்பாரை மாவட்டம் குடிப்பரம்பல் 1963 - 2007
ஆண்டு | சிங்களவர் | தமிழர் | முஸ்லிம் | ஏனையோர் | மொத்தம் | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
No. | % | No. | % | No. | % | No. | % | No. | % | |
1963 | 61,996 | 29.28 | 49,185 | 23.85 | 97,621 | 46.11 | 1,618 | 0.76 | 211,732 | 100 |
1971 | 82,280 | 30.18 | 60,519 | 22.85 | 126,365 | 46.35 | 1,670 | 0.61 | 272,605 | 100 |
1981 | 146,943 | 37.78 | 77,826 | 20.37 | 161,568 | 41.54 | 1,222 | 0.31 | 388,970 | 100 |
2001 | 236,583 | 39.90 | 109,188 | 18.53 | 244,620 | 41.25 | 1,891 | 0.32 | 592,997 | 100 |
2006மதிப்பீடு | 251,166 | 39.89 | 115,912 | 18.41 | 259.798 | 41.26 | 2768 | 0.44 | 629,644 | 100 |
2007 மதிப்பீடு | 228,938 | 37.49 | 111,948 | 18.34% | 268,630 | 43.99% | 1,145 | 0.19% | 610,719 | 100 |
மூலம்: சிறிலங்கா புள்ளி விபரத் திணைக்களம்கிழக்கு மாகாணம் (திருகோணமலை, அம்பாரை, மட்டக்களப்பு) முழுவதையும் எடுத்துக் கொண்டால் 1827 இல் 1.30 விழுக்காடாக இருந்த சிங்களவர் எண்ணிக்கை (250) திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் காரணமாக 1981 இல் 24.99 (243, 701) விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதே சமயம் தமிழர் எண்ணிக்கை 75.65 (34,758) விழுக்காட்டில் இருந்து 42.06 (410,156) விழுக்காடாகக் குறைந்துள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை 23.56 (11,533) விழுக்காட்டில் இருந்து 32.34 (315,436) விழுக்காடாக உயர்ந்துள்ளது! கீழ்க்கண்ட அட்டவணை 3, 1827 - 2007 ஆண்டு காலப்பகுதியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் கிழக்கு மாகாணத்தின் குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகின்றது. |
அட்டவணை 3
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் கிழக்கு மாகாணக் குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றம் 1827-2007
ஆண்டு | தமிழர் | முஸ்லிம் | சிங்களவர் | ஏனையோர் | மொத்தம் | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
எண் | % | எண் | % | எண் | % | எண் | % | எண் | % | |
1827 | 34,758 | 75.65 | 11,533 | 23.56 | 250 | 1.30 | ||||
1881 | 75,318 | 58.96 | 43,001 | 33.66 | 5,947 | 4.66 | 3,489 | 2.73 | 127,755 | 100 |
1891 | 86,701 | 58.41 | 51,206 | 34.50 | 7,508 | 5.06 | 3,029 | 2.04 | 148,444 | 100 |
1901 | 96,917 | 55.83 | 62,448 | 35.97 | 8,778 | 5.06 | 5,459 | 3.14 | 173,602 | 100 |
1911 | 101,181 | 55.08 | 70,395 | 38.32 | 6,909 | 3.76 | 5,213 | 2.84 | 183,698 | 100 |
1921 | 103,245 | 53.54 | 75,992 | 39.41 | 8,744 | 4.53 | 4,840 | 2.51 | 192,821 | 100 |
1946 | 136,059 | 48.75 | 109,024 | 39.06 | 23,456 | 8.40 | 10,573 | 3.79 | 279,112 | 100 |
1953 | 167,898 | 47.37 | 135,322 | 38.18 | 46,470 | 13.11 | 4,720 | 1.33 | 354,410 | 100 |
1963 | 246,059 | 45.03 | 184,434 | 33.75 | 108,636 | 19.88 | 7,345 | 1.34 | 546,474 | 100 |
1971 | 315,566 | 43.98 | 247,178 | 34.45 | 148,572 | 20.70 | 6,255 | 0.87 | 717,571 | 100 |
1981 | 410,156 | 42.06 | 315,436 | 32.34 | 243,701 | 24.99 | 5,988 | 0.61 | 975,251 | 100 |
2001* | ||||||||||
2007 மதிப்பீடு | 590,132 | 40.39 | 549,857 | 37.64 | 316,101 | 21.64 | 4,849 | 0.33 | 1,460,939 | 100 |
மூலம்: சிறிலங்கா புள்ளிவிபரத் திணைக்களம்* 2001 ஆம் ஆண்டு வட - கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் அம்பாரை தவிர்ந்த எனைய 7 மாவட்டங்களில் போர் காரணமாக குடித் தொகைக் கணிப்பீடு நடத்தப்படவில்லை.அடுத்து மட்டக்களப்பு மாவட்டம். இதன் நிலப்பரப்பு 2,633 ச.கிமீ ஆகும். வெருகல் தொடக்கம் பாணமை வரையான பிரதேசங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், 1961 ஆம் ஆண்டு நாவிதன்வெளி, சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தாவூர், அட்டாளைச்சேனை, இறக்காமம், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோயில், பொத்துவில் ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்து மொனறாகலை, பதுளை, மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த சில பிரதேச செயலகப் பிரிவுகளையும் இணைத்து திகாமடுல்ல மாவட்டம் (அம்பாரை) உருவாக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தை மேலும் சிங்கள மயப்படுத்தும் திட்டத்துடனேயே அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குப் பக்கமாக உள்ள மன்னம்பிட்டி உட்பட பல தமிழ் ஊர்கள் மகாவலி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அவை பொலன்னறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. திருகோணமலையையும் மட்டக்களப்பையும் துண்டாடும் வகையில் வடமுனையிலிருந்து கிரான் வரையான பகுதிகளிலும் அதேபோன்று மேற்கு எல்லையான புல்லுமலை வடமுனை மற்றும் வடக்கு எல்லையான மாங்கேணி, வாகரை, பனிச்சங்கேணி, புனானை கிழக்கு, வட்டவான், மதுரங்கேணிக்குளம், கதிரவெளி, பால்சேனை, அம்பந்தனாவெளி ஆகிய ஊர்களிலும் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை மட்டுமே தமிழர்கள் ஓரளவு தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது கூட நிலைக்குமா என்பது அய்யமாகவே உள்ளது. (http://www.eelanationnews. இனித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் சொல்லியவற்றையும் சொல்லத் தவறியதையும் கீழே பட்டியல் இட்டுள்ளோம். |
* போரின் போது இடம்பெயர்ந்த 320,000 தமிழ்மக்களில் 50,000 மக்கள் தொடர்ந்து முட்கம்பி முகாம்களுக்குள் போதிய உணவு, உடை, உறைவிடம் இல்லாது சட்டத்துக்கு முரணாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
* இடம்பெயர்ந்து முகாம்களில் வதைபட்டு பின்னர் வெளியே விடப்பட்ட 270,000 மக்களில் பெரும்பாலோர் சிங்கள இராணுவத்தால் இடைத்தங்க முகாம்களில் விடப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு 6 தகரம், 3 பொதி சிமெந்து, 5,000 பணம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொழில், கல்வி வாய்ப்பு பெருமளவு மறுக்கப்பட்டுள்ளது.
*போரின் போது சரணடைந்த 11,000 போராளிகள் தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். சிங்கள இராணுவத்தினர் இவர்களை நாய்கள் எனத் திட்டுகிறார்கள். இவர்கள் போர்க் கைதிகளாகக் கணிக்கப்படாமல் பயங்கரவாதிகள் போல் நடத்தப்படுகிறார்கள். இவர்களைப் பார்ப்பதற்கு செஞ்சிலுவைச் சங்க சார்பாளர்கள், ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
* போர் முடிந்த பின்னர் முன்னாள் போராளிகளெனக் கூறிக் கைதுசெய்யப்பட்டவர்கள் எங்குள்ளனர் என்று தெரியாத நிலையில் அவர்களது குடும்ப உறவுகள் சிறைகளிற்கும் தடுப்பு முகாம்களிற்கும் அலைந்து திரிகின்றனர்.
* பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் இரண்டின் கீழும் கைது செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான தமிழர்கள் ஆண்டுக்கணக்காக சிறைச்சாலைகளில் நீதி விசாரணை எதுவுமின்றி அடைத்து வைக்கபட்டுள்ளனர். கொடுமை என்னவென்றால் கணவனைத் தேடிக் கைக் குழந்தைகளோடு வந்த தாய்மாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளளனர். (http://www.tamilwin.com/view. php? 2a2IPBe0dbjog0ecQG174b4D988cd3 g2F3dc2Dpi3b436QV3e23ZLu20)
தமிழர் பூமி சிங்கள இராணுவ மயப்படுத்தல்
* தமிழர்களின் பாரம்பரிய தொன்மைகளையும் விழுமியங்களையும் அழித்து வட- கிழக்கை இராணுவ மயப்படுத்தி அதனை முழுமையாகவும் நிரந்தரமாகவும் இராணுவ ஆட்சியின் கீழ் வைத்திருப்பது தான் சிங்கள அரசின் சதித் திட்டம் ஆகும். இதன் மூலம் வடக்கும் கிழக்கும் தமிழர்களது பாரம்பரிய தாயகம் என்ற கோட்பாட்டை உடைத்து எறிய சிங்கள - பவுத்த பேரினவாத அரசு முற்படுகிறது. அதற்கு இசைவாக வடக்கு மாகாண ஆளுநராக ஓய்வு பெற்ற இராணுவ தளபதி ஜி.ஏ. சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளார். இது போலவே கிழக்கு மாகாண ஆளுநராக ஓய்வு பெற்ற கடற்படைத் தளபதி மொஹான் விஜவிக்கிரம நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணசபையின் முதன்மைச் செயலாளராக முன்னாள் திருகோணமலை அரச அதிபர் ரொட்றிக்கோ நெலுதெனிய நியமிக்கப்பட்டிருக்கிறார். கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் மாத்தறை மாவட்ட அரச அதிபர் உடகே நியமிக்கப்பட்டிருக்கிறார். திருகோணமலை மாவட்ட அரச அதிபராக (Collector) மேஜர் ஜெனரல் ரி.ரி.ஆர்.டி சில்வாவும் கிழக்கு மாகாணம் கல்விச் செயலாளராக கேணல் கோகன பணியாற்றுகிறார்கள். மாகாண சபை அமைப்பில் ஆளுநரே சகல நிறைவேற்று அதிகாரம் படைத்தவராக விளங்குகிறார். முதலமைச்சர் வெறும் கைப்பொம்மையாகவே செயற்படுகிறார். அண்மையில் நூறுவிழுக்காடு தமிழ்மக்கள் வாழும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக ஒரு சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
* யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அடங்கிய பாரிய இராணுவ தளங்கள் (Cantonments) நிறுவப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வடமாகாணத்தைச் சிங்கள மாகாணமாக மாற்றி அங்கு இராணுவத்தினர் உட்பட அவர்களது குடும்பங்களுமாக ஏறக்குறைய 4 இலட்சம் பேரை குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 4,500 ஏக்கர் அரச காணி மட்டுமின்றி இடம்பெயர்ந்த தமிழ்மக்களுக்குச் சொந்தமான காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
* இராணுவத் தேவைக்காக காணிகள் கையகப்படுத்தப்படுவதால், போரின் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட நிருவாகப் பிரிவுகளுக்கு உட்பட்ட ஏ-9 வீதியின் கிழக்குப் பகுதியிலுள்ள முறிகண்டி, இந்துபுரம் மற்றும் சாந்தபுரம் ஊர்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களைத் தங்கள் சொந்த வீடுகளில் குடியேற விடாது சிங்கள இராணுவம் தடைசெய்துள்ளது. மீள்குடியேற்றத்திற்காக மனிக்பாம் முகாமிலிருந்து அழைத்துச் செல்ல்பட்டு சாந்தபுரம் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களும் அடங்குவர். கடந்த வியாழக்கிழமை (ஆடி 29) அவர்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ""எங்களை எங்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்யுங்கள் அல்லது எங்களைக் கொன்றுவிடுமாறு அரசிடம் கூறுங்கள்' என ஆற்றாது அழுது குளறி கண்ணீரும் கம்பலையுமாகச் சொல்லி அரற்றியிருக்கிறார்கள்.
*கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் மரமுந்திரிகை வாரியத்துக்குரிய 1400 ஏக்கர் காணியில் 1050 ஏக்கர் காணி சிறிலங்கா கடற்படையினர் தளம் அமைக்க கையகப்படுத்தப் பட்டுள்ளது.
* வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் சிங்கள இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அங்கேயே குடும்பத்துடன் குடியமர்த்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இவர்களுக்கு 110 மில்லியன் டொலர் செலவில் 60,000 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை சீனா மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஏறக்குறைய 4 இலட்சம் சிங்களவர்கள் அரச செலவில் வடக்குப் பகுதியில் குடியமர்த்தப்படுவர். இதனால் நான்கு சிங்களவர்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்பக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.(http://groups. yahoo.com/group/thamilvaddam/ pending?view=1&msg=12506)
* வலிகாமம் வடக்கில் தொண்ணூறுகளில் கைப்பற்றப்பட்ட தமிழர்களது வீடு வாசல் மற்றும் காணிகள் உயர்பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த 17,000 தமிழ்மக்கள் இற்றைவரை மீள் குடியமர்த்தப்படாது நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். உச்ச நீதிமன்றம் இந்த மக்கள் தங்கள் வீடுகளைப் போய்ப் பார்க்க அனுமதித்தும் சிங்கள இராணுவம் அவர்களைத் தடுக்கிறது.
* வட - கிழக்கு கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பு என்றும் சிங்கள இராணுவம் உயிர்களைப் பலிகொடுத்தே அதனைக் கைப்பற்றி இருப்பதால் சிங்கள இராணுவம் இடும் கட்டளைகளைத் தமிழ் உயர் அதிகாரிகள் கேட்டுக் கேள்வியின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மீறுவோர் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கப் பட்டுள்ளார்கள்.
* ஆனையிறவு, கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிங்கள அரசு போர் நினைவுப் பூங்காக்கள், தூபிகள் போன்றவற்றை நிறுவியுள்ளது. அதே நேரம் தமிழர்களின் தேசிய அடையாளங்களான மாவீரர் துயிலும் இல்லங்கள், கோயில்கள், சிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தை முற்றாக அழித்துவிட்டு சிறைச்சாலை கட்டப்படுகிறது.
* ஓட்டிசுட்டான் கற்சிலைமடுவில் நிறுவப்பட்டிருந்த மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுக்கல் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அருகாமையில் இருந்த பண்டாரவன்னியன் சிலையும் காணாமல் போய்யுள்ளது. 1803 ஆம்ஆண்டு மாவீரன் பண்டாரவன்னியன் பிரித்தானிய இராணுவ கப்டன் ஒருவரனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தான். அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களினால் கற்சிலைமடுவில் மாவீரன் தோற்கடிக்கப்பட்டான் என்பதினை நினைவுபடுத்தும் கல் நாட்டப்பட்டு அதில் முக்கிய வாசகங்கள் வெட்டப்பட்டிருந்தது.
சிங்கள மயப் படுத்தல்
*தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி “கிரநிக்கா ” முல்லைத்தீவு “மூலதூவ” என சிங்களத்தில் எழுதிவைக்கப் பட்டுள்ளன. கடந்த காலங்களில் நூற்றுக்கு மேற்பட்ட ஊர்கள், குளங்கள் சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. மணல் ஆறு வெலி ஓயா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* வடமாகாணப் பள்ளிக்கூடங்களில் சிங்களம் படிப்பிக்க வலுக்கட்டாயமாக ஆசிரியர்களை அரசு நியமித்துள்ளது. அய்ந்தாம் வகுப்பு புலமைப் பரிசுத் தேர்வுக்குத் தோன்றும் மாணவர்களிடம் கேட்கப்படும் 25 கேள்விகளில் 5 கேள்விகள் சிங்களத்தில் கேட்கப்படுகிறது.
* எல்லா அறிவித்தல்கள், பெயர்ப்பலகைகள் பெரும்பாலும் சிங்களத்தில் மட்டும் எழுதிவைக்கப்படுகிறது. நிருவாகம் பெரும்பாலும் சிங்களத்திலேயே நடக்கிறது. தமிழ் அரச மொழிகளில் ஒன்றாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த எள்முனை அளவு முயற்சியும் எடுக்கப்படவில்லை.
* யாழ்ப்பாணத்தில் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற மேம்பாட்டுப் பணிகளின் ஒப்பந்தங்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
பவுத்தமயப் படுத்தல்
* வடக்கிலும் கிழக்கிலும் பவுத்த விகாரைகளும் பவுத்த தூபிகளும் நிறுவப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் - வவுனியா செல்லும் ஏ9 நெடுஞ்சாலையின் இருபுறமும் ஒன்பது விகாரைகள் நிருமாணிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் சந்திகள் தோறும் புத்த சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. புத்தரை வழிபடுமாறும் பவுத்த தேரர்களுக்கு தானம் வளங்குமாறும் தமிழ்மக்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.
* மட்டக்களப்பு, கண்ணகிபுரம் தமிழ் ஊரில் சிறப்பு அதிரடிப் படையினரால் பவுத்த விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் முருகன் ஆலயம் ஒன்றை நியமிப்பதாக கூறி முன்னதாக அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்.(http://www. tamilwin.com/?page=7)
போர் நடைபெற்ற காலத்திலும் அதற்கு முந்தியும் இனச் சிக்கலுக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது அரசியல் தீர்வே சரியான வழி என இந்திய அரசு ஓயாது சொல்லிவந்தது. போரை நடத்த இந்திய அரசு ஒல்லும் வகையெல்லாம் சிறிலங்கா அரசுக்கு உதவி செய்தது. இன்றும் தமிழ்மக்களது அரசியல் வேட்கைகளை நிறைவு செய்யும் தீர்வொன்றை சிறிலங்கா அரசு முன்வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கிளிப்பிள்ளை போல் சொல்கிறது. ஆனால் ஆட்சித் தலைவர் மகிந்த இராசபக்சே இந்தியாவை எள்முனை அளவிலும் பொருட்படுத்துவதாக இல்லை.
தமிழக அரசையும் முதல்வர் அவர்களையும் ஏன் இந்திய மைய அரசு அலட்சியம் செய்கிறது என்பது எமக்கு விளங்கவில்லை. தமிழர்கள் இடத்தில் வங்காளிகளோ, பஞ்சாபிகளோ இருந்திருந்தால் இந்திய மைய அரசு இப்படியான அலட்சியப் போக்கை கடைப்பிடிக்க முடியுமா? இந்தியா, சிறிலங்கா அரசு சீனா பக்கம் சாயாது தடுக்க அதனோடு ஒட்டி உறவாடும் போக்கைக் கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது. ஆனால் மகிந்த இராசபக்சே தொடர்ந்து சீனா பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறார். இந்தியா ஒரு நாள் ஏமாறப் போகிறது.
இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் அதன் பூர்வீகக் குடிகள் ஆவர். சங்கப் புலவர் பூதந்தேவனார் ஈழத்தில் வாழ்ந்த காரணத்தால்தான் அவர் ஈழத்துப் பூதந்தேவனார் எனச் சுட்டப் பெற்றார். அண்மையில் அம்பாந்தோட்டை மாவட்டம் திசமகாரமா என்ற ஊரில் 2,200 ஆண்டு பழமையான தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது. (http://www.tamilnet.com/art. html?catid=79&artid=32303)
சிறிலங்கா அரசு சிங்கள - பவுத்த வெறிபிடித்த அரசு ஆகும். பெரும்பான்மை சிங்கள - பவுத்த மக்கள் தனக்குக் கொடுத்த ஆணையின் கீழேயே தன்னால் ஆட்சி செய்ய முடியும் என மகிந்த இராசபக்சே வெளிப்படையாகக் கூறுகிறார்.
இராசபக்சே ஆட்சியில் ஊடக சுதந்திரம் இல்லை. அண்மையில் ஒரு ஊடக நிறுவனம் காடையர்களால் தாக்கப்பட்டுச் சேதப் படுத்தப்பட்ட்டுள்ளது. 2005 இல் இருந்து 2009 ஆண்டுவரை 34 செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதில் 30 பேர் தமிழர்கள்.
நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்புக்களை அரச அலட்சியம் செய்கிறது. சிறிலங்கா அரசு மக்களாட்சிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டங்களின் கீழ் ஒரு கொடுங்கோல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் மக்களைக் கண்டு பயப்படுவதற்குப் பதில் தமிழ்மக்கள் ஆட்சியாளர்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் இந்திய மைய அரசோடு பேசி மகிந்த இராசபக்சே தமிழர்களின் தாயகத்தை அழிப்பதற்கு மூர்க்கத்தோடு மேற்கொண்டுள்ள சிங்கள - பவுத்த - இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழீழ மக்கள் சுதந்திரத்தோடும் ஒத்துரிமையோடும் வாழ வழிசெய்யுங்கள். மடல் நீண்டு விட்டது. மன்னிக்கவும்.
மிக்க அன்புடன்
வேலுப்பிள்ளை தங்கவேலு
தலைவர்
Subscribe to:
Posts (Atom)